கறுப்பு பணம் – கறுப்பு தினம் – நவம்பர் 8


ஆம் நவம்பர் 8, மறக்கமுடியுமா.. பல கோடி மக்களின் வயிற்றில் அடித்த தினம், அடிமட்ட மக்களை ஆட்டிப்படைத்த தினம்.

இதே நாள், கடந்த வருடம் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த தினம். ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்று இருமாப்பு கொண்டோரின் இதயத்தையும் ஆட்டுவித்த தினம்.

கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன், புதிய இந்தியாவை பிறப்பிக்கிறேன் என்று எவ்வித முன்னேற்ப்பாடும் இல்லாமல் பண முதலைகளின், பணத்தை காக்க இருட்டடிப்பு செய்த தினம். சாமானிய மக்களின் வாழ்வை சாகச வாழ்வாக மாற்றிய தினம். மறக்க முடியுமா??

தன் உழைப்பில் உருவான சேமிப்பைக் கூட அடுத்தவர் கட்டளையின் படி தான் செலவழிக்க முடியும் என்று இக்கட்டான சூழலுக்கு தள்ளிய தினம்.
“எங்களிடம் தாருங்கள், உங்கள் பணத்தை பாதுகாக்கிறோம். பாதுகாக்க கூலியை நீங்கள் தர வேண்டாம், வட்டியாக நாங்கள் தருகிறோம் என்று கூவி அழைத்து, சேமிப்பை கணக்கை துவங்க வைத்த வங்கிகளெல்லாம், “2000 தான் தர முடியும், நீ எம்புட்டு வச்சு இருந்தா என்ன, நாளைக்கு வா என்று நம் பணத்தை வைத்தே நம் சுயமரியாதையை ஏளனம் செய்த தினம்”.

வேலைக்கு செல்ல இயலாமல், அன்றாடம் சம்பாதிக்கும் தினக் கூலியை கூட பெற முடியாமல், கால் கடுக்க நள்ளிரவு முதல் காத்து கிடந்தது பாலைவனத்தில் கண்ட பனித் துளியாய் 2000 ரூபாயை பெற்று சென்றனர். இன்னும் பலர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல், கால் கடுக்க பல மணி நேரங்களின் பரிசாக, பணம் தீர்ந்தது, இன்று போய் நாளை வா என்று துரத்தி அடிக்கப்பட்டனர்.

யாசகம் கேட்கும் மனிதர்களை கூட மனிதாபிமானத்தோட பார்க்கும் மனிதர்களுக்கு, அவர்கள் சொந்த உழைப்பின் ஊதியத்தை வைத்துக் கொண்டு அரசாங்கமும், அதிகாரிகளும் நம்மை கையேந்த விட்ட தினம்.
சேகரித்த பணம், வங்கியில் தான் இருக்கிறது, நிச்சயத்த திருமணத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று உறங்கியவர் எல்லாம், மார்பில் அடித்துக் கொண்டு அழுத தினம்.

எதிர்பாரா மரணமும் கூட இறந்தவருக்காக அழ வைக்கவில்லை, இந்த நேரத்திலா இறக்கணும் என்று இறந்த சடலத்தைக் கண்டு, கேள்வி கேட்க வைத்த தினம். சுகப் பிரசவம் கூட சுமையாக ஆன தினம். பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் என்று நோயால் அவதிபடக் காரணமான தினம். கையில் காசு இருந்தும் மருத்துவம் பார்க்க முடியாமல் வலியால் அவதியுற்ற தினம்.

ஏ.டி.எம் என்றால் என்ன என்று அறியாத மக்களை, ஏ.டி.எம் வாசலில் கால் கடுக்க காக்க வைத்த தினம்.

எழுத படிக்கத் தெரியா கூலி தொழிலாளர்களும், துப்புறவு தொழிலாளர்களும், வயல் வாய்காலில் வேலை பார்ப்பவர்களும், அடுப்படியின் ராணிகளும் இறுக முடிந்து வைத்த முந்தானையின் சேகரிப்பும், துணிகளுக்கு அடியில் அடங்கி கிடந்த, அஞ்சரை பெட்டியில் பாதுகாப்பாய் இருந்த 500, 1000 எல்லாம், என்னை விடுவியுங்கள் என்று எகிறி குதித்து வெளியில் வந்த தினம்.

வரிசையில் காத்துக் கிடந்தும், காத்துக் கிடந்து பலன் அற்றும், கூட்ட நெரிசலில், தற்கொலை என்று இழந்த உயிர்கள் தான் எத்தனை? கறுப்பு பண ஒழிப்பு அறிவிக்கப்பட்ட பத்து நாட்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரை காவு வாங்கிய தினம்.

இறந்தவர்கள் கையில் எத்தனை கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது? இறந்தவர்களுக்கும் கறுப்பு பணத்திற்கும் என்ன சம்மந்தம். எவ்வித கவலையுமின்றி அடுத்தவரின் இறப்பையும் திண்டாட்டத்தையும், குளிர்வீக்கப்பட்ட அறையில் இருந்துக் கொண்டு கண்டு ரசிக்கும் ஆட்சியாளர்களுக்கு எல்லாம் உயிரும் கூட கறுப்பு பணமாக மாறிய தினம்.

இரண்டு நாட்களில் தீரப் போகும் மளிகை சாமான்கள் கூட, முன்னேற்ப்பாடு இல்லாமல் போனால் திண்டாட்டம் என்று அறிந்த, குடும்ப தலைவிகளுக்கு உள்ள எளிமையான புள்ளி விவரம் கூட நாட்டை ஆளும் மனிதர்களுக்கு இல்லை. கவலையுமில்லை. நமக்கு நாடு சுற்றவே நேரம் போதவில்லை, இதில் நாட்டு மக்களைப்பற்றி சிந்திக்க ஏது நேரம் என்ற பிரதமரின் மைன்ட் வாய்ஸ் இந்தியா முழுவதும் ஒலித்த தினம்.

ஒத்த 2000 ரூபாயை தூக்கிக் கொண்டு தெரு தெருவாக அலைந்தாலும் சில்லறை கிடைக்காமல், நூறு ரூபாய்க்கு பொருட்களை வாங்கிவிட்டு மீதமுள்ள 1900 ரூபாயை நீங்களே வைத்திருங்கள், அன்றாடம் வாங்கி கழித்துக் கொள்கிறேன் என்று, நம் பணத்தை மளிகைக் கடையில் அடகு வைத்த தினம். பலரின் வாழ்வை சூனியமாக்கிய தினம்.

கறுப்பு பணம் தான் ஒழிந்ததா? ஆம் ஒழிந்தது கறுப்பு பணம் என்றால் என்னவென்றே அறியாத பலரின் வாழ்வாதாரங்கள் தான் ஒழிந்தது.

பணமதிப்பிழப்பால், இழந்தது என்னவோ இந்தியாவின் மானமும், இந்தியர்களின் மானமுமே அன்றி, அடக்க நினைத்த பண முதலைகளின் கொட்டம் அல்ல. நீர் இல்லை என்றால் நிலம், நிலம் இல்லை என்றால் நீர் என்று வாழும் முதலைகளுக்கு இரைகள் எங்கிருந்தால் என்ன?

“பணமதிப்பிழப்பு ஒரு வரலாற்று பிழை” என்று முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் கூறுகிறார். இயற்கை பேரழிவு சுனாமியை விட, மனிதனால் எற்படுத்தப்பட்ட இப்பேரழிவே மிகக் கொடூரமானது என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார்.

ஆனால் ஆளும் மத்திய அரசாங்கமோ, பயங்கரவாதத்திற்கு நிதி செல்வது தடைப்பட்டுள்ளது, கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது ஆனால் இன்னும் எண்ணித்தான் முடிக்கவில்லை என்றும் வெற்றுக் கூச்சல் போட்டு பிதற்றுகிறது.

நாட்டை ஆளும் பிரதமரோ தனது ட்வீட்டரில், “இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, 125 கோடி பேர் ஒன்றாக இணைந்து ஒரு போர் தொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர், அதாவது கறுப்பு பணத்தை ஒழிக்க இவர் தொடுத்த போரில் வெற்றிக் கிட்டியுள்ளதாம், ஆனால் என்ன, அதை கண்ணால் தான் காண முடியாது. ஏனென்றால் அது அவரின் கோணல் பாதைக்கு மட்டுமே தெரியும். பூதக்கண் கொண்டு அவரால் மட்டுமே காண முடியும்.


தமிழில் எதை மறந்தாலும் வஞ்சப்புகழ்ச்சி அணியை மறக்க முடியாது. நம் அன்றாட வாழ்வில் ஒரு முறையாவது நமது சுற்றி உள்ளவர்களில் பயன்படுத்தி வருவதாலோ என்னவோ. அதாவது ஒன்றை புகழ்வது போல் இகழ்வதும், இகழ்வது போல் புகழ்வதுமே வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.

அவ்வணியைக் கொண்டே இன்று பிரதமர், அவர் அறிவிக்கும் எவ்வித திட்டங்களுக்கும் அமைதி காக்கும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிப்பது போல் முட்டாள் என்று இகழ்கிறார்.  

ஆட்சியைக் கையில் பிடித்து இரண்டரை வருடத்திற்கு எத்தனையோ புதிய இந்தியாவை பிறப்பிக்க தான் செய்கிறார் பிரதமர், ஆனால் முடிவு என்னவோ “Operation Success but Patient Died” என்றே ஆகிறது.

பதவியில் வருவதற்கு முன் பலவித கனவுகள், ஆசைகள் நிறைவேற்ற ஆசைப்படும் ஆட்சியாளர்களின் பட்டியலில், உலக வரைப்படத்தில் ஒற்றை நாட்டைக் கூட தனது பதவிக் காலத்தில் காணாமல் போய்விடக் கூடாது என்ற கனவோடு வந்தவருக்கு, இந்தியாவும் ஒரு சுற்றுலா நாடே.

ஆனால் என்ன, நினைத்த அத்தனை “சோதனைகளையும்” செய்து பார்க்க இலவசமாக எலிகள் இங்கே குவிந்துக் கிடக்கின்றன. இன்னுமின்னும் எத்தனை சோதனைகள் வரப் போகிறதோ, அதில் எத்தனை எலிகள் மடிய காத்திருக்கிறதோ... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

“என்றும் மறவா” பட்டியலில் இனி நவம்பர் 8-ம் இடம் பிடிக்கும் நினைவாற்றல் உள்ளவர்களுக்கு. மனிதர்கள் மறதிக்காரர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர் என்பது லாபமாகி போகிறது அரசியல் வியாதிகளுக்கு.


-யாஸ்மின் ரியாஸ்தீன் 

Comments

  1. //சுகப் பிரசவம் கூட சுமையாக ஆன தினம்//

    இத படிக்கும்போது காட்சிகள் கண்முண்ணே வருது, எத்தனை உயிர்களை பலி கொண்ட தினம், இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க போறமோ இந்த பாவிகளிடமிருந்து அல்லாஹ் பாதுகாக்கனூம்.

    மிக ஆழமான பார்வை, அழகான எழுத்து நடை சிறப்பு, அருமை வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  2. Masha Allah!

    //எதிர்பாரா மரணமும் கூட இறந்தவருக்காக அழ வைக்கவில்லை, இந்த நேரத்திலா இறக்கணும் என்று இறந்த சடலத்தைக் கண்டு, கேள்வி கேட்க வைத்த தினம். சுகப் பிரசவம் கூட சுமையாக ஆன தினம். பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் என்று நோயால் அவதிபடக் காரணமான தினம். //

    Strong words. Good article. All are true!. Good job sr.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்