ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

உலகிலேயே சர்வேதச புத்தக கண்காட்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது தான் ஷார்ஜா, எக்ஸ்போ சென்டரில் நடக்கும் புத்தக கண்காட்சி. இம்மாதம் 1  முதல் 11 வரை நடக்கும் இப்புத்தக கண்காட்சியில் உலக அளவில் பல தரப்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களும், பல மொழிகளின் புத்தகங்களும் ஒன்றே சங்கமிக்கும் ஒரு அரிய வாய்ப்பு. ஆனால் தமிழுக்கு தான் இல்லை இப்படி ஒரு வாய்ப்பு.

ஆம் கடந்த 3-ஆம் தேதி பலதரப்பட்ட திட்டங்களோடு சென்ற எங்களுக்கு கிடைத்தது பல ஏமாற்றங்கள், இருப்பினும் புது வித அனுபவமாக இருந்தது. தி.மு.க செயல்தலைவர் திரு.ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் நிகழ்ச்சி, சில தோழிகளின் சந்திப்பு மற்றும் அதனூடே புத்தகங்களை பார்வையிடவும் திட்டமிட்டு சென்றிருந்தோம்..

நான்கு மணிக்கு திறக்கப்பட்ட வளாகத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் திரு.ஸ்டாலின் அவர்களின் உரையை கேட்பதற்காக செலவழித்தோம். உனக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் அங்க போன? என்று கேட்கும் உங்க மைன்ட் வாய்ஸ் இங்க வர செவியை கிழிக்கும் அளவில் கேட்கிறது. உண்மை தான், நம்மூர் தலைவர இவ்வளவு ஈசியா பாக்க கூடிய வாய்ப்பு மற்றும் இதுவரை அவரது உரையை நேரே கேட்டிராத எங்களுக்கு, நேரே கேட்க அடித்த லக்கி டிரா, புத்தக கண்காட்சில் அரசியல் பேச்சு இருக்காது என்பது போன்ற பெரும் எதிர்பார்ப்போடு சென்றிருந்தோம்.. பறந்து விரிந்த வளாகமும், எண்ணிக்கையலடங்கா இருக்கைகளும், பலத்த பாதுகாப்போடு மாலை 5 மணிக்கு துவங்கி 6 மணிக்கு முடிய வேண்டிய உரை 5.45 ஆகியும் தொடங்கவில்லை, திரு.ஸ்டாலின் அவர்கள் அதுவரை வளாகத்திற்கு வரவும் இல்லை.

ஒருவழியாக அவரது வரவிற்கு பிறகு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான் பலருக்கு.. புத்தக கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக நாடு விட்டு நாடு வந்திருப்பவர் பல அரிய கருத்துகளை புத்தகம், இலக்கியம் தொடர்பாக வழங்குவார் என்று தவறாக சிந்தித்தது எங்கள் மீதே குற்றம். அங்கு முற்றிலும் மாறாக நடந்தது. முழுக்க முழுக்க அரசியல் நிகழ்ச்சி போல் இருந்தது பெருத்த ஏமாற்றம். அத்தனை நேரம் காத்திருந்த பலர், உரை தொடங்கிய சிறிது நேரத்தில் விடை பெற்று சென்று இருக்கைகள் காலியானதை வைத்தே திரு.ஸ்டாலின், தனது உரை மக்களை எவ்வாறு கவர்ந்தது என்பதை உணர்திருக்க முடியும்.


தமிழ் நாட்டின் பலத்த எதிர்க்கட்சியின் செயல்தலைவர், தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவரின் மகன், அக்கட்சி வெற்றி பெற்றால் அடுத்த முதலமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ள ஒருவர், அயல்நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை தாமதமாகவும், நிகழ்ச்சிக்கு சற்றும் தொடர்பில்லாத உரை என்று என்னை போன்ற பலருக்கும், அவரது விசிறிகளுக்கும் பெருத்த ஏமாற்றமும், வருத்தமுமே மிஞ்சியது.

ஹைர் நாம கொடுத்தது வச்சது அவ்ளோ தான். இதுக்கு தான் தேவை இல்லாத வேலையில் எல்லாம் தலையிடக் கூடாது என்று பெரியவக சொல்வாங்க.. நாமளும் முன்னேறலாம்னு பாத்தா, ஊஹும் நடக்காது போலவே.. 

ஆனால் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களுக்கு ஏற்ப்பாடு செய்யப்பட வெகு எளிமையான ஏற்ப்பாடு திட்டமிட்டப்படி சரியாக இரவு 8.30-க்கு துவங்கியது. மேடை பேச்சிற்கு கம்பீரமான குரலோ, உசுரக் கொடுத்து கத்தி பேச வேண்டிய தேவையோ இல்லை என்பதை அழகிய பொறுமையான அவரது பேச்சு எடுத்துரைத்தது.


பல அழகிய வாழ்வியல் முன் மாதிரிகளை அவரது புத்தகம் “துணை எழுத்தில்” எழுதி இருப்பதாகவும், அதை பற்றிய சிறு சிறு கட்டுரை சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டதும்  அருமை. மனதை வெகுவாக கவர்ந்தது. புத்தகத்தை வாங்கும் ஆர்வத்தை தூண்டியது. 

விசில் இல்லை, ஆராவாரம் இல்லை, மிக எளிதாக ஏற்ப்பாடு செய்யபப்ட்ட அந்த நிகழ்ச்சி, ஒதுக்கப்பட்ட இருக்கையையும் தாண்டி பலர் நின்றுக் கொண்டே அவரது உரையை செவி மடுத்தனர். அந்த அளவிற்கு ஸ்வாரஸ்யமாகவும், எளிமையாகவும் இருந்தது. முதல் முறையாக ஒருவரின் மேடை பேச்சைக் கேட்டு யாரும் இந்த அளவிற்கு கவர்ந்து இருப்பார்களா தெரியவில்லை. ஆனால் எஸ்.ரா வெகுவாக கவர்ந்தார். ஆம், நான் முதல் முறை அவரது பேச்சைக் கேட்கிறேன்.

ஒரு கட்டுரை எழுத, அதன் மூலம் வாசிப்பாளர்களை கவர, பக்கம் பக்கமாக எழுதணும் என்பதை விட “உண்மையை உள்ளபடியே எழுதுங்கள், உண்மைக்காக உங்களை கொண்டாடுவார்கள்” என்ற அவரது கூற்று முற்றிலும் உண்மை.

எழுத்தாளர் என்பவர் சம்பாத்தியத்திற்காக எழுத நினைத்தால் அவருக்கு கிடைப்பதென்னவோ ஏமாற்றம் தான், முடிந்தால் பத்திரிக்கைகளுக்கு எழுதி, அனுப்பி தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கு சிறப்பு பரிசாக சொற்ப தொகையை பெற முடியுமே தவிர நிரந்தர வருமானம் என்பது ஒன்று இருக்காது, ஆனாலும் பலர் அதில் ஆர்வம் கொள்ள காரணம் தமிழின் மீதுள்ள பற்று, இலக்கிய துறையில் உள்ள ஆர்வம், மேலும் அது ஒரு சேவை என்றே பலர் செய்து வருகினறனர்.

தமிழில் கிட்டத்தட்ட 5 லட்சம் வார்த்தைகள் உள்ளதாகவும், சாதாரண ஒருவர் குறைந்தது 1000 வார்த்தைகளையும், தமிழில் திறம் வாய்ந்தோர் என்றால் 5000 வார்த்தைகள் வரை பயன்படுத்துகின்றனர், ஆனால் இன்னும் கற்காத, பயன்படுத்தாத வார்த்தைகள் அதிகம் உண்டு என்று அவர் கூறியதும், இதுவரை எழுத்துப் பணியை தவிர சம்பளத்திற்காக வேறு எங்கும் வேலைக்கு போனதில்லை என்று அவர் கூறியதும் ஆச்சரியத்தில் விழிகள் விரிந்தன.

நமக்கு சற்றும் தொடர்பு இல்லாத வேறெந்த மொழிகளையெல்லாம் மேம்படுத்த நாம் எத்தனை சிரத்தை எடுக்கிறோம், ஆனால் நம் தாய்மொழியில் உள்ளவற்றை முழுதாக கற்க, ஆராய, அதில் நம்மை மேம்படுத்திக் கொள்ள மறக்கிறோம் என்பதை உணர்ந்த தருணம் அது.

அவர் கூறியதில் மேலும் முக்கியமான ஒன்று, வெற்றி பெற்றவர்களை மட்டுமே இந்த சமூகம் கொண்டாடும், தோல்வி பெறுபவர்களை கண்டுக் கொள்வதில்லை. வெற்றி பெறுபவர்கள் சொற்பமானவர்களே ஆனால் தோல்வியுறுபவர்களின் எண்ணிக்கை அதிகம், அவர்களுக்கு தான் அன்பு, பாசம், உந்துதல் என்று அனைத்தும் தேவைப்படுகிறது.

எத்தனை உண்மையான ஒன்று. இய்லபிலேயே திறமை வாய்ந்தவர்களையும், வெற்றி பெரும் தன்மை கொண்டவர்களையே மென்மேலும் முன்னேற்ற இச்சமூகம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. வெற்றியின் நுனி வரை வந்து தோல்வியுறுபவரை இச்சமூகம் சீண்டிபார்த்தே முடக்கி போடுகிறது.

ஒருவழியாக திரு.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கிடைத்த ஏமாற்றத்தை திரு.எஸ்.ரா அவர்களின் பேச்சு சமரசம் செய்தது மகிழ்ச்சி. இன்னும் அவர் கூறிய அழகிய வாழ்வியல் சம்பவங்களை எல்லாம் எடுத்துக் கூறினால் கட்டுரை நீளும்.

தமிழ் நாட்டில் இருந்து, தமிழுக்காக வந்து சிறப்பித்த இரு பிரபலங்கள். ஆனால் சர்வேதேச புத்தக கண்காட்சியில் தமிழுக்கான புத்தகங்களுக்கு இடமில்லை என்பது மிகவும் வருந்த வேண்டிய விசயம். இந்திய பதிப்பகங்களுக்கு என்று ஒதுக்கிய இடத்தில், மலையாளம், உருது என்று பல மொழிகளின் புத்தகங்களை காண முடிந்தது. ஆனால் தமிழ் புத்தகங்களோ அல்லது தமிழ் பதிப்பகத்தின் ஸ்டால்களோ இல்லை. ஆங்காங்கே சில புத்தகங்கள் மட்டும் காண முடிந்ததே தவிர, தமிழுக்கு என்று பிரத்யேக ஏற்ப்பாடு ஒன்றுமிருந்ததாக தெரியவில்லை.

புத்தக வாசிப்பில் நம் மக்களின் ஆர்வமின்மையும் கூட இது போன்ற புறக்கணிப்பிற்கு காரணமாக இருக்கலாம். வாசிப்பு பழக்கம் குறைவாக உள்ள பெரும்பான்மையான மக்களை மனதில் கொண்டு, வாசிப்பில் ஆர்வமுள்ள சிறு பகுதி மக்களையும் ஏமாற்றத்தில் விடுவது ஏற்கத்தக்கதல்ல. 

வாசிப்பில் உள்ள வெற்றிடத்தை இனி வரும் சமுதாயமாவது மாற்ற வேண்டும். முக்கியமாக இஸ்லாமிய சமூகத்தில் வாசிப்பு என்ற ஒன்று இல்லாமல் போனதே பல வரலாற்று திரிபுகளுக்கு காரணம். பல அரிய கருத்துக்களும் சூறையாடப்பட்டு, தங்களுக்கு ஏற்றார்போல் திருத்திக் கொள்கின்றனர் சரித்திரம் படைக்க முடியா சூழ்ச்சிகாரர்கள்.

தமிழ் மக்கள் பலரது ஆதங்கங்களை கண்டு கேட்டு தமிழ் புத்தகங்களுக்கு என்று ஒரு ஸ்டால்-ஆவது உருவாகுமா வரும் வருடங்களில் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆங்கில புத்தக வாசகர்களுக்கு குமிந்துக் கிடக்கிறது எண்ணிடலங்கா புத்தகங்கள். எவ்வித கட்டணமும் இல்லாது, பிரம்மாண்டமான சர்வேதேச புத்தக கண்காட்சியை வாய்ப்புள்ளவர்கள் கண்டு களித்திட பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துங்கள்.

குறிப்பு: எஸ்.ரா அவர்களின் உரையில் இருந்து இடப்பட்டுள்ள சில தகவல்களில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கலாம், நினைவில் உள்ளதை பகிர்ந்தேன்.

-யாஸ்மின் ரியாஸ்தீன்



Comments

  1. நேர்' மறைவில்லா வர்ணனை

    ReplyDelete
    Replies
    1. ஜசக்கல்லாஹ் ஹைரன் அண்ணே..

      Delete
  2. //இஸ்லாமிய சமூகத்தில் வாசிப்பு என்ற ஒன்று இல்லாமல் போனதே பல வரலாற்று திரிபுகளுக்கு காரணம்//

    நிதர்சணம், இந்த சூழலை மாறும் அல்லது மாற்ற வேண்டும் இன் ஷா அல்லாஹ்....!!!

    எஸ் ரா அவர்களின் புத்தகங்களை நான் படித்தது கிடையாது ஆனால் அவர் பேச்சின் வாயிலாக தெரிந்துக்கொண்டேன், சொல்ல வேண்டியத கச்சிதமாக சொல்லுவார், அவருடைய எல்லா பேச்சுக்களையும் youtubeல் தேடி தேடி Almost பார்த்துவிட்டேன்...!!!

    எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா...!!!

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ்.. துஆ செய்ங்க.. ஜசக்கல்லாஹ் ஹைரன் பிரதர்

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்